Monday, October 10, 2011

குப்ரின் மீது எழும் தனிமனிதனதும் சமூகங்களினதும் வரலாற்று முடிவு.


நிராகரிப்பாளர்களின் செயல்கள் வெட்;டவெளியில் தோன்றும் கானல் நீரை ஒத்தவை. தாகமுடையோன் அதனை நீரென்றே கருதி விடுகிறான். அங்கே வந்து பார்க்கும் போது தான் அது எதுவுமல்ல என அவனுக்குத் தெரிகிறது. அங்கே அவன் அல்லாஹ்வைக் காண்பான். அல்லாஹ் அவனது கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுகிறான். அல்லாஹ் மிக விரைவாகக் கணக்குக் கேட்கக் கூடியவனாவான். (ஸுரா நூர் : 39)

இந்த வசனம் இறைநிராகரிப்பாளர்களின் செயல்களுக்கு உதாரணம் கூறுகின்றது. அச்செயல்கள் எத்தகைய பெறுமானமும் அற்றவை என்பதே இந்த உதாரணத்தின் சுருக்கமான பொருள்.

இஸ்லாம் வாழ்க்கையை உலகம் என்ற சிறிய, குறுகிய பகுதியோடு மட்டும் முடித்துக் கொள்ளவில்லை. மனிதன் உலகில் தோன்றியது தொடங்கி சுவர்க்கம் அல்லது நரகம் என்பது வரையில் வாழ்க்கைச் சாலை நீண்டிருக்கின்றது என்பது அதன் திட்டவட்டமான கருத்தாகும்.

செயல்களின் பெறுமானம் இந்த கணிப்பீட்டை வைத்தே மதிப்பிடப்படல் வேண்டும். இந்த வகையில் ஈமானின் அடிப்படையில் செயல்கள் அமையாத போது அது எந்தப் பயனும் அற்றதாக பெறுமானம் இல்லாததாக மாறி விடுகிறது.

இத்தகைய பரந்த கண்ணோட்டத்தில் மனிதன் செயல்களை நோக்குவதில்லை. குறிப்பாக பௌதிக உலக முன்னேற்றங்களிலும் மதச்சார்பற்ற சிந்தனையிலும் மூழ்கி, மூச்சுத் திணறிக் கெர்ணடிருக்கும் தற்கால மனிதன், உலோகாயத அடிப்படையில் செயல்கள் நோக்குகிறான்.

பௌதிக உலகில் மனிதனின் சாதனைகள் இன்று அளப்பரியனவாகும். இயற்கையின் சக்திகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அவனது முயற்சி படிப்படியாக வெற்றியடையத் துவங்கியதும், வெற்றிப் பாதையில் கடவுட் கொள்கை அநாகரீக காலத்தில் வாழ்ந்த பயந்த, பலவீனமான மனிதனுக்கே தேவைப்பட்டது. பலமும்,சக்தியும் கொண்டு பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலும் நவீன மனிதனுக்குக் கடவுள் ஏன்? அவன் தாழ் பணிய வேண்டிய அவசியம் தான் என்ன, என்று அவன் பேசத் துவங்கி விட்டான்.

இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு பொதுவாக வரலாறு நெடுகிலும் இவ்வாறு தான் அமைந்துள்ளது. ஷுஅரா, ஹுத் போன்ற ஸுராக்கள் ஆத், ஸமூத் சமூகங்கள் பௌதிக உலக வாழ்வின் கண்ட முன்னேற்றங்களால் எத்தகைய மனோ நிலை கொண்டு வாழ்ந்தார்கள் என்பதை விளக்குகின்றன.

அவர்களது செயற்பாடுகளால் பௌதிக உலகில் அதிசயங்கள் நிகழ்ந்தன. அற்புதமான காலகட்டடக் கலைத்திறன் கைவரப் பெற்றவர்களாக வாழ்ந்த அவர்கள், கோட்டை கொத்தளங்களை நிர்மாணித்து, பூமியில் அதிசயம் புரிந்தனர். நாம் நிரந்தரமாக வாழ்வோம், எமக்குக் கிடைத்திருக்கும் செல்வமும் பலமும் அழிந்து போகப் போவதில்லை என அவர்கள் கருதத் தலைப்பட்டனர். ஹுத், ஸாலிஹ் (அலை) ஆகிய இரு தூதர்களும் இவர்கள் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள். அல்லாஹ்வின் பால் அவர்களை அழைக்க இத்தூதர்கள் அரும்பாடுபட்டார்கள். இறுதியில் அவர்களுக்குச் செவிமடுக்காத அனைவரையும் அல்லாஹ் அழித்து விட்டான். ஸுரா ஷுஅரா 123-150 வரையுள்ள வசனங்கள் இக்கருத்தை விளக்குகின்றன.

சமூகங்கள் மட்டுமல்ல, தனிமனிதர்களின் நிலையும் இத்தகையதே. செல்வமும் அதிகாரமும் கையில்குவியும் போது இறை நிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டெழும்பும் தனிமனித வாழ்வும் இதே மனோநிலையைக் கொண்டதாக அமைகிறது.

காரூன், மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன், தான் சேமித்த செல்வங்கள் அனைத்தும்தனது அறிவைக் கொண்டு சம்பாதித்தவை என அவன் கருதினான். தன் உழைப்பு தனக்கு வாழ்வளிக்கும் எனக் கூறினான். ஆனாலும் அவனுடைய உழைப்பு அவனைக் காக்கவில்லை. அவன் கட்டிக் காத்த செல்வம் அவனுக்குப் பிரயோசனம் கொடுக்கவில்லை. அவனும் அழிந்து போனான். இக்கருத்தை அல்குர்ஆன் ஸுih அல் கஸஸல் 76-86 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறது.

இரு நபர்களில் ஒருவன் பெரும் பணக்காரன். பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக் காரன், மற்றவன் ஏழை. தன்னிடம் குவிந்திருக்கும் செல்வத்தால் மதிமயங்கிப் போனான் பணக்காரன். இந்தத் தோட்டமும் நிறைந்த செல்வமும் தன்னை வாழ வைக்கும். தன் செல்வம் என்றும் அழிந்து போகாது என்ற மனப்பிரமை அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அவனது தோட்டம் அழிந்து, சேர்த்து வைத்த செல்வமும் அழிந்தது. உண்மை அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது. இச்சம்பவத்தை அல்லாஹ் ஸுரா கஹ்ப் 32-42 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறான்.

இறைநிராகரிப்பை அடிப்படையாகக் கொண்டு எழும் தனி மனித வாழ்வு, சமூக வாழ்வு, இறைநிராகரிப்பை அடித்தளமாகக் கொண்டமையும் நாகரீகம், அனைத்தும் எத்தகைய பிரயோசனத்தையும் கொடுக்காமலேயே அழிந்து போகும் என்பது மிக அடிப்படையானதொரு உண்மை. இதனை நிரூபிக்கும் வகையில் அல்குர்ஆன் முன்வைக்கும் வரலாற்று நிகழ்வுகளில் சிலரே மேலே தரப்பட்டன. இக்கருத்தை சுருக்கமாகத் தருகிறது கீழ்வரும் இறைவசனம் :

நாம் நல்லதையே செய்கிறோம் என்ற எண்ணத்தில் உலக வாழ்வின் முயற்சிகள் பிரயோசமற்று வீணாகிப் போன செயல்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரும் நஷ்டவாளிகளை உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்கள் தான் தங்களது இரட்சகனையம் அவனைச் சந்திப்பதையும் மறுப்பவர்கள். (கஹ்ப் : 103-105)

முற்றிலும் இந்தக் கருத்தைத் தான் அல்குர்ஆன் மேற்குறிப்பிட்டுள்ள உதாரணத்தில் தருகிறது.

இந்த உதாரணத்தை இருவகையில் விளக்க முடியும். மறுமையோடு இணைத்து இந்த உதாரணத்தை நோக்க முடியும். உலக வாழ்வை மட்டும் வைத்தும்நோக்க முடியும். செயல்களின் உண்மைப் பெறுமானம் மறுமையில் அது கொடுக்கும் விளைவைப் பொறுத்ததே. இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மனிதன் இந்த உலகில் என்ன உழைத்தாலும், என்ன திரட்டினாலும் அவை அனைத்தும் அழிந்து போகும். அவனும் அழிந்து போவான்.

இக்கருத்தோடு இணைத்து உதாரணத்தை நோக்குங்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பொருட்கள் கானல்நீர், தாகம் கொண்டவன், தாகம் கொண்டவன் நீர் தான் என எண்ணிக் கொள்ளும் பிரமை. அதனைப் பின்பற்றி ஓடும் அவனது நடவடிக்கை. தாகம் கொண்டோன் - வாழ வேண்டும் என்ற தாகம் கொண்டோன் - உலகப் பொருட்களே தன் தாகத்தைத் தீர்க்கும் என நம்புகிறான். ஏனெனில் அதற்கு அப்பால் பார்க்கும் ஆற்றல் அவனுக்கில்லை. அவனது முயற்சி முழுக்க முழுக்க உலகப் பொருட்களைத் திரட்டுவதிலேயே செலவாகிறது. உணவு, உடை, வீடு, சுகாதார வசதிகள் இப்படித் தேடித் தேடிக் குவிக்கிறான். தன்னைக் காக்கும் அரும் பொருட்கள் இவை என அவன் நம்புகிறான்.

தூரத்தில் நின்று பார்க்கும் போது - தாகத்தால் பார்க்கும் போது வெட்டவெளியிலே கானல் நீர் உண்மை நீர் போன்று தெரிகிறது. அள்ளிப் பருக ஓடோடி வருகிறான். அது கானல் நீருமல்ல - எதுவுமல்ல - வெறும் பிரமை எனப் பின்னால் புரிகிறது.

தன்னைக் காக்கும் அரும்பொருட்கiளாகத் தான் தோற்றமளித்தன. உலகப் பொருட்களும், ஆனால் தான் சேர்த்து வைத்த பொருட்கள் இருக்க – அவற்றைப் பாதி அனுபவிக்கும் போதே அல்லது அனுபவிக்க முடியாமலேயே இறந்து போகிறான் மனிதன். மஹ்ஷர் வெளியில் எழும்புகிறான். சுவர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கிறான். தனது இறந்த கால வாழ்வை நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குப் புரிகிறது. நிச்சயமான இந்த மறுமை வாழ்வு தான் உண்மையான வாழ்வு (அன்கபூத் : 64) என்று.

நான் இவ்வளவு காலமும் உலகம் தான் வாழ்வு என்ற மாயையில் ஏமாந்து போனேன். வாழ்க்கைக்கான பொருட்களை அடக்கியிருக்கும் வாழும்வீடு என்ற உலகத்தின் காட்சி வெறும் பொய்த் தோற்றம். கானல் நீர் என்பது அப்போது தான் அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொய் மானைத் தொடர்ந்து ஓடி வந்தேனே எத்தகைய கைசேதம்.

சேமித்த செல்வம், பெற்றிருந்த அதிகாரம், அனைத்தும் அழிந்து போயின. எதுவும் இங்கில்லை. அவை இல்லாவிடடாலாவது பரவாயில்லை. தான் யாரை நிராகரித்தேனோ அந்த அல்லாஹ் நிற்கின்றானே என்பது தான் அடுத்த அதிர்ச்சி நிராகரிப்பாளனுக்கு

அல்லாஹ் அவனது செயல்களுக்கான கணக்கைப் பூரணமாகத் தீர்த்து விடுவான். இந்த உலக வாழ்வு மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலம். அது மட்டுமல்ல. பொதுவாக இந்தப் பூமியின் வயதோடு ஒப்பிடும் போது தனிமனித வாழ்வு என்பது மிக மிக அற்பமான காலப்பகுதியாகும். அல்லாஹ்வின் கேள்வி கணக்கு மிக விரைவானது. நீண்ட நெடுங்காலம் நிராகரிப்பை இவ்வுலகில் அவன் விட்டு வைக்கவில்லை.

வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க உலகத்தைக் கட்டியாளும் எல்லா மனிதர்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும். இந்த வாழ்வு நிலையற்றது. மறுமையில் மஹ்ஷர் (கணக்குத் தீர்க்கும்) வெளியில் நின்று பார்க்கும் போது தான் எவ்வளவு மோசமாக நாம் ஏமாந்து விட்டோம் என்பதை இறைநிராகரிப்பில் வாழ்ந்த ஒவ்வொரு தனிமனிதனும் விளங்கிக் கொள்வான்.

அல்குர்ஆன் சொன்ன உதாரணத்தின் ஒரு பக்கம் இது. அது தரும் இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது.

இறைநிராகரிப்பின் அடிப்படையில் எழும் சமூக ஒழுங்கும் நிலைக்காது. அது சீர்குலையக் கூடிய தண்டனையைப் பெறும். இது குர்ஆன் கூறும் தவிர்க்க முடியாத விதி. உலக வாழ்விலேயே அதற்கான தண்டனையை அது பெறும். தனி மனிதர்கள் செய்யும் தீமைகளுக்கான கூலி சில வேளை இவ்வுலகிலே கிடைக்காது போகலாம். ஆனால், சமூகம் செய்யும் தீமை, இறைநிராகரிப்புக்கான கூலி நிச்சயமாகக் கிடைத்தே தீரும்.

எத்தனை பிரதேசங்கள் அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் கட்டளைகளைப் பிடிவாதத்தோடு புறக்கணித்தன. அவற்றை நாம் கடுமையாக விசாரித்தோம். யாரும் நினைத்துப் பார்க்காத கடும் தண்டனையைக் கொடுத்தோம். (தலாக் : 8)
இக்கருத்தின் அடிப்படையில் இந்த உதாரணம் நோக்கப்படும் போது அது கொடுக்கும் கருத்து சற்று வித்தியாசப்படுகிறது. பௌதிக உலகும் அதன் செல்வங்களும் வாழ்வின் அடிப்படை என நினைத்து அவற்றைத் தளமாகக் கொண்டு எழுகிறது ஒரு சமூக வாழ்வு. அச்சமூகத்தின் செயல்கள் மிகப் பெரிய விளைவுகளைத் தருகின்றன. வாழ்க்கை வசதிகள் பெருகுகின்றன. எண்ணற்ற கண்டுபிடிப்புகள், இயற்கையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரும் மிகப் பெரிய முயற்சிகள் சிறிது சிறிதாக வெற்றியடைகின்றன.

வாழ்க்கைத் தாகம் தீர்ந்தது. அதோ தெரிகிறது. உன்னத வாழ்வு, வறுமையும், பட்டினியும், பிணியும் ஓடி ஒழியப் போகின்றன. மனிதன் மரணத்தையே வென்று விடப் போகிறான் என்ற எண்ணம் தோன்றுகிறது. வாழ்வை அனுபவிக்கப் போகிறேன் என்று எண்ணி, நாகரீகத்தின் உச்சியில் நிற்கும் போது சேர்த்ததெல்லாம் கானல் நீராகத் தோன்றத் துவங்குகிறது. வாழ்க்கைத் தாகத்தைத் தீர்க்க இவைகளால் முடியாது. இவை வாழ்க்கையின் புறத்தேவைகளை மட்டுமே தீர்க்க முடியும். அக வாழ்வு சீரழிந்;ததால் புறவாழ்வு அர்த்தமற்றதாகி விடுகிறது. புறவாழ்வின் செல்வங்கள் அழிவுக்கும் சீர்கேட்டுக்கும் பயன்படத் துவங்குகின்றன. வாழ்க்கை;காகப் பௌதிக உலகின் முன்னேற்றங்களைத் தேடிய மனிதன் ஏமாற்றம், விரக்தி, தற்கொலை, மனநோய்கள் இவற்றால் பீடிக்கப்படுகிறான். நான் கானல் நீரை நீராக நினைத்து ஓடி வந்திருக்கிறேன் என்று அப்போது அவனுக்குப் புரிகிறது.

சமூக வாழ்வுக்கு அல்லாஹ் விதித்த சட்டம் தொழிற்படத் துவங்குகிறது. அல்லாஹ் தன் கணக்கை மிகப் பூரணமாகவே தீர்த்து விடுகிறான். அழிவுக்கு உட்படுகிறது. அந்தச் சமூக வாழ்வு. கட்டியெழுப்பிய நாகரீகத்தின் வெறும் தடயங்களும் அடையாளங்களுமே எஞ்சுகின்றன.




ARTICLE BY - உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸூர் 
(நன்றி : பயணம்)


No comments:

Post a Comment