Wednesday, July 6, 2011

ஹாரூனின் சகோதரியே! ... குர்ஆனில் முரண்பாடா ?

நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!


இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனைரீதியான தாக்குதல்கள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்தவ திருச்சபைகளும் அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப்பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும் அவர்கள் தங்களை திருத்திக்கொள்வதாகத் தெரியவில்லை. இன்னும் கெடுவோம் பிறரையும் கெடுப்போம் - என்ன பந்தயம்? என்ற அளவில்தான் அவர்களின் நடவடிக்கைகள் உள்ளன.


அசத்தியத்திலுள்ள கிருத்துவர்கள் தங்களின் போலியான மதக்கோட்பாட்டை மற்றவர்களுக்கு கொண்டுசேர்ப்பதில் அவர்களுக்குள்ள ஆர்வமும் வேகமும் சத்தியத்;திலுள்ள முஸ்லிம்களிடம் இறைவனின் உண்மை மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்வதில் இல்லை என்பது வருந்தத்தக்க ஓர் உண்மையாகும். இஸ்லாமியப் பிரச்சாரங்களின் அளவும் மதிப்பீடும் கிருத்துவர்களை ஒப்பிடுகையில் கடலின் அளவில் ஒரு கைப்பிடிநீர் போல்தான் காட்சியளிக்கிறது. இருப்பினும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறியும்போது 'என்றும் சத்தியமே வெல்லும்' என்பதை உணரமுடிகிறது.


  அதுபோல மேலும் ஒரு முரண்பாடு திருமறையின் 19 வது அத்தியாயம் (ஸுரா மர்யம்) வசனம் 28 ல் உள்ளதாக விவாதிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் முதலில் கிருத்துவ உலகால் எழுப்பப்பட்ட இக்கேள்விக்கு தகுந்த விடையளிக்கப்பட்டுவிட்ட போதிலும் அவர்களின் கேள்வியில் சில மாற்றங்களை செய்து 'குர்ஆனில் முரண்பாடுள்ளது கண்டுபிடித்துவிட்டேன் இதோ பார்' என்ற ரீதியில் சிலர்களால் இப்போது இன்டர்நெட்மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்தோ பரிதாபம்! அத்தகைய சிந்தனையில் உள்ளவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். அது ''நீங்கள் குர்ஆனை விளங்கவேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன்; திருக்குர்ஆனை அனுகாததுவரை உங்களால் குர்ஆனை புரிந்து கொள்ள இயலாது. எனவே எப்படியாவது குர்ஆனை பொய்ப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டு குர்ஆனை விளங்கவேண்டும் என்ற சிந்தளையில் அனுகுங்கள். இல்லையேல் உங்களின் இம்முயற்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்களும்தான் மிஞ்சும்''.



மர்யமா? ஹாரூனின் சகோதரியா?




பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!''. ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' (என்று பழித்துக் கூறினார்கள்). (திருக்குர்ஆன் 19:27,28) என்று குர்ஆன் கூறுகிறது.



இதில் இறைவன் மர்யம் (அலை) அவர்களை ஹாரூனின் சகோதரியே என ஏன் அழைக்க வேண்டும்? ஏன் மர்யம் என்றோ நபி ஈஸா (அலை) வின் தாயாரே என அழைத்திருக்கக் கூடாது? ஹாரூன் என்பது நபி மூஸா (அலை) அவர்களின் சகோதரர் அல்லவா? அவர் மர்யம் (அலை) அவர்களுக்கு எப்படி சகோதரர் ஆவார். குர்ஆனை எழுதிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இதுகூடத் தெரியவில்லையா? ..... என்று இவர்களின் ஆராய்ச்சி தொடர்கிறது.

 

இதே தொனியில் நம்மாலும் பல கேள்விகள் கேட்க இயலும். இருப்பினும் முதலில் மர்யம் (அலை) மற்றும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி திருமறை கூறுவதை காண்போம் பின்னர் 19:27,28 வசனங்களின் விளக்கத்தை பார்ப்போம்.



மர்யமுக்கு அல்லாஹ் அளிக்கும் நற்சான்றிதழ்.

 

இறைநம்பிக்கையாளர்களுக்கு முன்மாதிரியும் கண்ணியவான்களின் கண்ணியவாளருமான அன்னை மர்யம் (அலை) அவர்களைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்டவாறு விளக்குகிறான்.


(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, அவர் தம்மை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக ஒரு திரையை அமைத்துக் கொண்டர். அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; அவர் மர்யமிடம் சரியான மனித உருவில் தோன்றினார்.

மர்யம் ஜிப்ரயீலைக் கண்டதும், ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் என்னை நெருங்காதீர்'' என்றார்.

''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க வந்துள்ளேன்'' என்று ஜிப்ரயீல் கூறினார்.

அதற்கு மர்யம், ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?'' என்று கூறினார்.

''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு (அல்லாஹ்விற்கு) மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்'' என ஜிப்ரயீல் கூறினார்.

மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். பின்பு அவருக்கு ஏற்பட்ட பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது. ''இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா'' என்று மர்யம் வருந்தி கூறினார்.

அப்போது ஜிப்ரயீல் ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்'' என்று அழைத்து கூறினார். இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். ஆகவே, அவற்றை உண்டு, ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்'' என்று கூறும்.

பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' என்று பழித்துக் கூறினார்கள்.

ஆனால் மர்யம் இதுபற்றி தம் குழந்தையிடமே கேட்கும் படி அதன்பால் சுட்டிக் காட்டினார். ''நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?'' என்று மக்கள் கூறினார்கள்.

''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் நிறைவேற்ற எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக என்னை ஏவியிருக்கின்றான்;. நற்பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்'' என்று அக்குழந்தை கூறியது.

இத்தகையவர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா ஆவார்;. எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் இதுவே ஆகும். அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''அகுக!'' என்று தான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது. நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்'' என்று நபியே! நீர் கூறும். (திருக்குர்ஆன் 19 : 16-36).

'ஹாரூனின் சகோதரியே!' என்பதின் விளக்கம் என்ன?


அக்காலத்தில் சிறந்த குடும்பத்தில் பிறந்த மர்யம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைபடி அதிசயமான முறையில் எந்த ஆணின் துணையின்றி நபி ஈஸா (அலை) அவர்களைப் பெற்றெடுக்கிறார்கள். மர்யம் (அலை) அவர்கள் பெற்ற குழந்தையோடு அந்த சமூகத்தில் வந்தபோது மர்யம் (அலை) அவர்கள் மீது சந்தேகம்கொண்ட அம்மக்கள், மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!. ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று பழித்துக் கூறினார்கள்.

இங்கு சகோதரி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள அரபி மூலச்சொல் 'உஹ்த ஹாரூன்' என்பதாகும். அரபி மொழியில் சகோதரன் என்ற சொல் தன்னுடன் பிறந்தவரை மட்டும்தான் குறிக்கும் என்றில்லை. ஒரு குலத்தைச் சார்ந்தவரை அக்குலத்தின் சகோதரர் என்று சொல்வது அரபி மொழி வழக்கமாகும். ஹாரூனின் சகோதரியே! என்று ஊர் மக்கள் அழைத்ததாக குர்ஆன் கூறுவதின் கருத்து ''நம்மில் மதப்பற்றுள்ள ஓர் உயர் குலத்தில் பிறந்த பெண்ணாகிய நீ என்ன காரியம் செய்துவிட்டாய் ?'' என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பாக வாழ்ந்தவர்களின் சரிதையாகும் இது. அல்லாஹ் தன் வேதங்களை நபிமார்களுக்கு அருளும்போது அந்தந்த நபிமார்களோடு அப்போது வாழும் மக்கள் எந்த மொழியைப் புரிந்து கொள்வார்களோ அந்த மொழியில்தான் அருளியுள்ளான். நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் சுர்யானி (அராமிக்) என்று அழைக்கப்பட்ட அம்மக்களின் தாய்மொழியில் அல்லாஹ் அருளினான். நபி ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் அரபி மொழியில் இறக்கப்படவில்லை என்பதை வைத்து, மர்யம் (அலை) அவர்களை ஹாரூனின் சகோதரியே! என்று அழைத்த அம்மக்களின் மொழியும், தன் தொட்டில் பருவத்தில் அம்மக்களிடம் பேசிய நபி ஈஸா (அலை) அவர்களின் மொழியும் அரபி இல்லை என்பதை விளங்க முடிகிறது.

மேலும் ஹாரூனின் சகோதரியே! என்று அல்லாஹ் அழைக்கவில்லை மாறாக அம்மக்கள்தான் அன்று அவ்வாறு அழைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் என்பதையும் கவனிக்கவேண்டும். மர்யம் (அலை) அவர்களை ''மதப்பற்றுள்ள ஹாரூனின் உயர் குலத்தில் பிறந்தவளே'' என்ற பொருளில் அம்மக்கள் அன்று அவர்கள் மொழியில் அழைத்ததை அரபிமொழியில் இறங்கிய குர்ஆனில் நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்த அரபியர்கள் தங்கள் தாய்மொழியில் ''பரம்பரை'' என்ற சொல்லை எவ்வாறு புரிந்துகொள்வார்களோ அப்படித்தான் கூறவேண்டும். எனவேதான் ஹாரூனின் குலத்தைச் சார்ந்தவர் என்ற பொருள்படும் அரபி மூலச்சொல்லான 'உஹ்த ஹாரூன்' என்ற பதத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

இதில் ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரரா? என்ற சந்தேகம் வரலாம். ஆனால் ஹாரூன் என்பவர் அக்காலத்தில் வாழ்ந்த மதப்பற்றுள்ள, உயர் குலத்தில் பிறந்த, செல்வாக்குமிக்க நல்ல மனிதர் என்றும் இறை நம்பிக்கை விஷயத்தில், ஓரிறைக்கொள்கையில் மர்யம் (அலை) அவர்களைப் போன்று தெளிவும் பிடிப்பும் கொண்டவராக வாழ்ந்தவர் என்றும் குர்ஆன் விரிவுரையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு வாதத்திற்காக ஹாரூனின் சகோதரியே! என்பதில் ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்று வாதிட்டாலும் அதிலும் குர்ஆன் முரண்படுவதாகக் கூற இயலாது. ஏனெனில் அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்..

 



ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 3:33,34)

ஆதம், நூஹ், இப்றாஹீம் மற்றும் இம்ரானின் (அவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக) சந்ததியினரிடையே பரம்பரை ரீதியான குடும்பத் தொடர்பு உள்ளதை அல்லாஹ் இங்கு சுட்டிக்காட்டுகின்றான். நபி மூஸா (அலை) அவர்களும், நபி ஈஸா (அலை) அவர்களும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களுடைய வழித்தோன்றல்களாக நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.

எனவே நபி மூஸா (அலை) அவர்களின் சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களும் நபி ஈஸா (அலை) அவர்களுடைய தாயார் மர்யம் (அலை) அவர்களும் பரம்பரையின் மூலம் சகோதர சகோதரிகளாவர். எனவே ஹாரூன் என்பவர் நபி மூஸா (அலை) அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்று வாதிட்டாலும் அதிலும் குர்ஆன் முரண்படவில்லை என்பதை விளங்களாம்.

எழுத படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை தானாக கற்பனையில் எழுதினார் என்பது உண்மையானால் தன்னை விட பல ஆயிரம் வருடங்கள் முன் வாழ்ந்தவர்களின் பரம்பரைகள் பற்றிய உண்மைகள் முதல் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நவீன விஞ்ஞான மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் வரை மிகத் துள்ளியமாக விளக்கிட முடியாது. எனவே குர்ஆனை எழுதியது முஹம்மது நபி (ஸல்) அவர்களல்ல மாறாக அல்-குர்ஆனில் ஆசிரியர் அனைத்துலகையும் படைத்த அல்லாஹ்தான் என்பதை இதிலிருந்து விளங்கிட முடிகிறது.


'ஹாரூனின் சகோதரியே!' என்ற சொல் அறிவுப்பூர்வமானதா?



மகனே' 'மக்களே' 'சகோதரியே!' என்பனபோன்ற சொல்வழக்கு தமிழ்மொழியிலும் ஆங்கிலத்திலும் கூட, நம்மால் பெறப்படாத நம்முடன் பிறக்காத பிறருக்கும் அழைப்பு வாக்கியத்தில் பொருந்தும். உதாரணமாக ஒரு மேடைப் பேச்சாளன் தன் பெற்றோர் மற்றும் மனைவி மக்கள் இருக்கும் அவையில் தன் உரையை 'சகோதர சகோதரிகளே' என்று துவங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அங்குள்ள அவர் தந்தையையும் மகனையும் அவன் உடன் பிறந்த சகோதரர் என்றா நாம் பொருள் கொள்வோம்? அல்லது சகோதரிகளே என்று அவர் அழைத்ததால் அவரது மனைவியும் தாயும் அவருக்கு சகோதரிகளாகி விடுவார்களா?. இல்லை 'சகோதர சகோதரிகளே' என்று அவர் அழைத்தது மரியாதைக்குரிய அழைப்பாகத்தான் நாம் புரிந்து கொள்வோம்.

''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை'' என்று அம்மக்கள் கூறியதிலிருந்து ஹாரூன் மற்றும் மர்யம் (அலை) அவர்களின் பெற்றோர் மிக்க கண்ணியத்துடன் அக்காலத்தில் வாழ்ந்ததை அறியமுடிகிறது. மர்யம் (அலை) அவர்களை நடத்தை கெட்டவராக நினைத்த அம்மக்கள் ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை என்று கூறியது மனிதஅறிவில் வெளிப்படும் யதார்த்த வார்த்தைகள்தாம்.

உதாரணமாக ஹிட்டருடைய பேரன் ஒருவரை கொலை செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அவரை நீ ஹிட்லருடைய பேரனாயிற்றே நீ கொலை செய்யலாமா? என்று வருந்தமாட்டோம். மாறாக பாட்டனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறான் என்றுதான் கூறுவோம். ஏனெனில் ஹிட்லர் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொலை செய்தவர். அதே நேரத்தில் காந்தியுடைய பேரன் ஒரு கொலையை செய்துவிட்டால் நாம் அவ்வாறு வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்கும். ஏனெனில் காந்தியடிகள் அகிம்சை வழியை தன்கொள்கையாகக் கொண்டவர்.

எனவே மர்யம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் குழந்தைமீதும் சந்தேகம்கொண்ட அம்மக்கள், மர்யமே! அல்லது ஈஸாவின் தாயாரே என்று அழைப்பதைவிட ஹாரூன் மற்றும் மர்யம் (அலை) அவர்களின் பெற்றோர்களை தொடர்புபடுத்தி அழைப்பதுதான் அறிவுப்பூவமானது. ஏன் மர்யம் என்றோ நபி ஈஸா (அலை)ன் தாயாரே என்றோ அழைத்திருக்கக் கூடாது? என்று வினவுவதுதான் மடமையேதவிர ஹாரூனின் சகோதரியே என்ற அம்மக்களின் அழைப்பை குர்ஆன் தெரிவிப்பது 100மூ அறிவுப்பூர்வமானதுதான்.

அதுபோல Sun என்ற ஆங்கில வார்த்தை வழித்தோன்றல், பரம்பரை (descendant) என்ற பொருளிலும் கையாளப்படும். உதாரணமாக பைபிளில் நபி ஈஸா (அலை) அவர்களை தாவுத் (அலை) அவர்களின் மகனாகவும், நபி யூசுப்(அலை) அவர்களின் மகனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

"Jesus Christ, the son of David,....". [Mathew 1:1]

"And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, ....." [Luke 3:23]


மேற்காணும் Sun என்ற ஆங்கில வார்த்தையை வழித்தோன்றல் அல்லது பரம்பரை என்ற பொருளில் 'ஏசு தாவிதின் வழித்தோன்றல்' என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் 'மகன்' என்ற நேரிடையான பொருள்கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் நபி ஈஸா (அலை) அவர்களை கண்ணியப்படுத்துவதாக அமையுமா? அல்லது அவர்களை கேவலப்படுத்துவதாக அமையுமா? ஒருவருக்கு இரண்டு தகப்பன் என்பதின் பொருள் என்ன? 'ஹாரூனின் சகோதரியே! ' என்ற திருக்குர்ஆன் வசனத்தை முரண்பாடு என்று கருதுபவர்களும், கிருத்துவ திருச்சபைகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

''இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்'' என்று கூறும் இறைமறுப்பாளர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பார்கள். உலகில் பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, ''நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்'' என்று கூறுவார்கள்.

பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், ''உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களோ தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் நேர்வழியை ஏற்காத குற்றாவளிகளாக இருந்தீர்கள்'' என்று கூறுவார்கள்.

அதற்கு பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், ''அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்'' என்று கூறுவார்கள்...
(திருக்குர்ஆன் 35:31-33)


 

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.
ARTICLE BY IBNU KURAISH
OTRUMAI TEAM

2 comments: