Wednesday, September 21, 2011

வகுப்புவாதமும் மதப் பழமைவாதமும் ஒன்றல்ல

வகுப்புவாதமும் (கம்யூனலிஸம்) ஓர் அரசியல் நோய். பிற நோய் நம் உடலின் ஆரோக்கியத்தை சிதைப்பது போல் வகுப்புவாதம் நம் அரசியல் அமைப்பை தீவிரமாக தாக்கி சிதைக்கிறது.

ஆங்கில அகராதி 'கம்யூனலிஸம்' என்பதற்கு நேர்மறையான பொருளைத் தருகிறது. மேற்கத்திய நாடுகளிலும் கம்யூனலிஸம் என்ற சொல் நேர்மறையான பொருளிலிலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது சொந்த சமூகத்தின் நலனுக்காகப் பாடுபடுவது கம்யூனலிஸமாக மேற்கு நாடுகளில் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம்கள் சமுதாயத்தின் நலனுக்காக முஸ்லிம்கள் பணி செய்வது. கிறிஸ்தவர்கள் அவர்களின் கிறிஸ்தவ சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவது என்ற தன்மையில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியச் சூழலில் வகுப்புவாதம் என்ற சொல் தனித்த கடுமையான எதிர்மறையான பொருளைத் தருகிறது. ஒரு சமூகம் சிலவற்றைப் பெறுவதற்காக பிற சமூகத்தைப் பகைமைப்படுத்தி எதிர்ப்பது இந்தியச் சூழலில் கம்யூனலிஸமாக கருதப்படுகின்றது. வேறொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பிற சமூகத்தின் அழிவே கம்யூனலிஸத்தின் அடிப்படை.

முகலாயர்கள் ஆட்சி புரிந்த 300 ஆண்டுகால வரலாற்றையும் உள்ளடக்கிய மொத்த இந்திய வரலாற்றையும் பார்த்தோம் என்றால், எந்த இந்துமதத் தலைவர்களும் இஸ்லாத்தின் ஊடுருவலிலிருந்து இந்து மதத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காக எந்த இயக்கத்தையும் ஆரம்பிக்கவில்லை. எந்த மௌலவியும் எந்த உலமாவும் மதமாற்ற நோக்கத்திற்காக தப்லீக் இயக்கத்தை ஆரம்பித்ததாகத் தெரியவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட பின்னர் 19 ம் நூற்றாண்டில் தான் மதத்தின் பெயரால் இயக்கங்கள் தோன்றின. ஒருவரை ஒருவர் தீவிரமாக எதிர்த்தனர். இந்த கால கட்டத்தில் தான் அதிகாரங்களுக்காக இந்து முஸ்லிம் சமூகங்களின் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக எதிர்த்தனர்.

வகுப்புவாதம் என்பது நவீன காலத்தின் கருத்தாக்கம். அது ஒரு அரசியல் கருத்தாக்கம். மத்திய கால கட்டத்தில் 'கம்யூனலிஸம்' என்ற கருத்தாக்கம் கிடையாது. மதப் பழமைவாதம் தான் இருந்தது.

மதப்பழமைவாதம், வகுப்புவாதம் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டி இருக்கின்றது. மதப் பழமைவாதம் தன்னுடைய சொந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் மிக இறுக்கமான முறையைக் கையாள்கிற ஒன்று.

ஆனால் வகுப்புவாதம் என்பது பிற சமூகங்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மதப் பழமைவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் இடையில் இருக்கின்ற அடிப்படையான வேறுபாடு இது.

வேறுபட்ட இரு சமூகங்களின் தலைவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக வகுப்புவாதத்தை கையிலெடுக்கின்றனர். மதப்பழமைவாதம் மதத் தலைவர்களாலும் வகுப்புவாதம் நவீனகால அரசியல் தலைவர்களாலும் தலைமை ஏற்று நடத்தப்படுகின்றது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இந்து மதத்தின் தலைவர்களோ இந்து மத போதகர்களோ அல்ல. கோல்வால்கர் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர். 1925 ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த ஹெட்கேவர் அடிப்படையில் மருத்துவர். எந்த மந்திரிலும் அவர் பூசாரியில்லை.

முஹம்மதலி ஜின்னா பெயரளவில் தான் முஸ்லிம். இஸ்லாமிய நம்பிக்கைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. இஸ்லாமிய நம்பிக்கைகளை அவர் தீவிரமாக பின்பற்றியதுமில்லை. அவரது முழு வாழ்க்கையும் மேற்கத்திய மயமானதாகவும் நவீனத்துவமானதாகவும் இருந்தது. முஸ்லிம் லீக்கின் எல்லாத் தலைவர்களின் வாழ்க்கையும் இவ்வாறே இருந்தது.

வீரசாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவர். ஜின்னா இருதேசக் கொள்கையை பேசுவதற்கு முன்பே 'இந்து ராஸ்டிரா' என்ற கருத்தைச் சொன்னவர். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஜாதி அமைப்புக்கு எதிராகச் செயல்பட்டவர். சாதி அமைப்புக்கு எதிரான இயக்கத்தை நடத்தியவர். ஆனால் இந்துத்துவத்தைக் கட்டினார். இந்து ராஷ்டிரத்தின் நிறுவனர் அவர்.

எந்த ஒரு தீவிரமான மதத் தலைவர்களும் கம்யூனலிஸ இயக்கங்களில் பங்கு பெற்றதில்லை. பெரும்பாலான உலமாக்கள் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார்கள். ஹுசைன் அகமது பதானி என்ற புகழ்பெற்ற உலமா பாகிஸ்தான் என்ற நாடு உருவாவதை எதிர்த்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் புத்தகம் ஒன்று எழுதினார். எல்லா மதங்களைச் சார்ந்த மக்களும் இணைந்த ஒரு நாடு என்ற கருத்தை இஸ்லாமிய அடிப்படையில் நின்று வலியுறுத்தினார்.

ஜின்னாவின் இருதேச கொள்கைக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை என்றார். இதனை வலியுறுத்துவதற்காக அஸ்ஸாம் முதல் கன்னியாகுமரி வரை அவர் பயணம் செய்து முஸ்லிம்களிடம் பேசினார். ஜின்னாவின் தவறான வழிகாட்டுதலில் செல்ல வேண்டாம் என்று அவர் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டார். எனவே மதத்தலைவர்கள் வகுப்புவாத இயக்கங்களில் தீவிரமாக செயல்படவில்லை. நவீன கால அரசியல் தலைவர்கள் தான் அதிகாரங்களுக்காக மத உணர்வுகளை வைத்து தீவிரமாக செயல்பட்டார்கள். அவர்கள் தான் வகுப்பு வாத இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார்கள்.

அத்வானி ராமர் பெயரில் ரதயாத்திரை மேற்கொண்டார். அவர் ஒரு மதத்தலைவரா? 'ராம்' என்பதை அவர் அதன் அர்த்தப் புரிதலுடன் அங்கீகரித்து தான் உச்சரிக்கின்றாரா? அத்வானி சிந்தி சமூகப் பிரிவைச் சார்ந்தவர். சிந்தி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் ராமர் நம்பிக்கையாளராக இருக்க மாட்டார். சிந்திகள் ராமரையோ வேறு எந்த இந்துக் கடவுளையோ வழிபடவோ நம்பவோ மாட்டார்கள்.

சமீபத்தில் அத்வானி பாகிஸ்தான் சென்று வந்த பிறகு ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்பாக கட்டுரை ஒன்று படித்தேன். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் எழுதியது. கட்டுரையாளரும் சிந்தி சமூகம் தான். அவர் தனது கட்டுரையில் 'அத்வானி வகுப்புவாதி இல்லை. அவர் அடிப்படையில் சிந்தி. சந்திகள் சூஃபியிசத்தை நம்புவார்கள். சூஃபியிசத்தை நம்புபவர்கள் எப்படி வகுப்புவாதியாக இருக்க முடியும்' என்று எழுதி இருந்தார்.

ஆனால் நமக்குத் தெரியும் அத்வானி ஒரு வகுப்புவாதி என்று. ராமரை நம்பாத, ராமரை வழிபடாத அத்வானி ஏன் அயோத்தியில் ராமருக்க கோயில் கட்ட முயற்சிக்க வேண்டும். அயோத்தியில் ராமருக்கு கோயில் என்று வாஜ்பாய் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வாஜ்பாய் பிராமணர். ராமரை நம்புபவர்.

ஆனால் ராமஜென்ம பூமியின் முக்கியமான கருவி அத்வானி. அவர் இந்து ஓட்டு வங்கிகளை கவர்வதற்காக ரதயாத்திரை மேற்கொண்டார். ராமர் கோவில் கட்டுவதற்காக அல்ல.

அரசியல் தலைவர்கள் மக்களுக்கும் ஏழைகளுக்குமான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. சமூக மாற்றத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் அதிகாரத்தை மட்டும் விரும்புகிறார்கள். மதத்தை அதற்கான கருவியாக பயன்படுத்துகிறார்கள். மதம் ஒரு வலிமையான கருவி. மக்கள் உண்மையிலேயே கடவுளை நம்புகிறார்கள். வழிபடுகிறார்கள். அவர்கள் பிற சமூகங்களை வெறுப்பதில்லை. அவர்கள் வகுப்பு வாதிகளுமில்லை. ஒரு உண்மையான மத நம்பிக்கையாளர் வகுப்புவாதியாக இருக்க முடியாது. ஒரு வகுப்புவாதி உண்மையான மத நம்பிக்கையாளனாக இருக்க முடியாது.

ஜின்னாவும் கோல்வால்கரும் மதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினார்கள். மகாத்மா காந்தி, மௌலான அபுல்கலாம் ஆஸாத் போன்றவர்கள் உண்மையான மத நம்பிக்கையாளர்கள். அவர்கள் மத உணர்வுகளைத் தூண்டியதில்லை. அவர்கள் மதச்சார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வலுச்சேர்த்தனர்.

காந்திஜி தன்னை ஒரு சனாதன இந்து என்றும் அப்படி சொல்லிக் கொள்வதில் தான் பெருமைப்பட்டுக் கொள்வதாகவும் கூறியவர். ஆனால் பிற மதங்களுக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட தன்னுடைய வாழ்நாளில் உபயோகிப்பதில்லை.

மௌலானா ஆஸாத் ஒரு மிகப் பெரிய இஸ்லாமிய சிந்தனையாளர் குர்ஆனுக்கான விரிவுரையை அவர் பல தொகுதிகளாக தந்துள்ளார். தனது விரிவுரையின் முதல் தொகுதியில் 'குர்ஆன்' மதங்களின் ஒற்றுமையைக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்.

எல்லா சமயங்களின் உயிர்த்துவமான போதனைகளும் ஒன்றாகவே இருக்கின்றன என்பதை ஒவ்வொரு சமயங்களில் வேத நூல்களின் அடிப்படையில் வைத்து எழுதுகிறார். குர்ஆனும் எல்லா மதங்களையும் மரியாதை செய்யவும் அன்பு செய்யச் சொல்வதையும் எந்த மதத்தையும் தாக்கக் கூடாது என்று சொல்வதையும் கூறுகிறார்.

1923 ல் ராம் கார்டில் காங்கிரஸ் தலைவராக ஆஸாத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு கூறுகிறார். ''இந்து - முஸ்லிம் இடையில் ஒன்றுபடாத விடுதலையை நான் அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் விடுதலையை இழப்பது என்பது இந்தியாவை இழப்பது. ஆனால் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை இழப்பது என்பது மொத்த மனித சமூகத்தையும் இழப்பது.'' ஆனால் அதையும் தாண்டி இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாததாக இருந்தது.




அஸ்கர் அலி இன்ஜினியர்

- (நன்றி : புதிய காற்று - ஆகஸ்டு

No comments:

Post a Comment